சென்னை: கன்னியாகுமரி மீனவர்களை மீட்பதில் தாமதம் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒன்று திரட்டி போராடுவோம் என மத்திய மாநில அரசுகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 14 நாட்களாக பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் அந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கும் மக்களை குறிப்பாக மீனவர்களை காப்பாற்றிட வேண்டுமென்று குரல் கொடுப்பதற்காக, அதை மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டிக் காட்டுவதற்காக அல்லது தங்களின் கடமைகளில் இருந்து தவறி இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் மீனவரணி சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நீங்களும், ஏதோ கன்னியாகுமரியில் தான் நடந்து கொண்டிருக்கிறது, அந்த மாவட்டத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இருந்துவிடாமல், எந்த மாவட்டமாக இருந்தாலும் நம்முடைய மக்கள் நம்முடைய மீனவர்கள் என்கிற உணர்வோடு, நம்முடைய உடன்பிறவா சகோதர, சகோதரிகளாக இருக்கக் கூடியவர்களுக்கு நாம் இந்த சென்னை மாநகரில் நின்றுகொண்டு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஓகி புயலைப் பொறுத்த வரையில், அந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். காணாமல் போயிருக்கும் மீனவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்கிற அந்த கணக்கை கூட எடுக்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மோசமான அரசாங்கத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலத்திலே பார்க்க முடியாது என்கிற அளவில் ஒரு குதிரைபேர ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொடூர தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஹிட்லரின் இதயம் கூட சில நேரங்களில் கசியும், ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த குதிரைபேர ஆட்சி இதயமில்லாத ஒரு ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பேரிடரை சமாளிக்க முடியாத ஒரு அரசு, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் எப்போது அதிமுக ஆட்சி வந்ததோ, அப்போதெல்லாம், ஒரு மிகப்பெரிய ஒரு பேரழிவு தமிழகத்தை தொடர்ந்து தாக்கிக் கொண்டு வருகிறது.