சென்னை: சபாநாயகர் தனபாலன் அறையில் தொண்டர்கள் புடைசூழ நுழைந்த தினகரன், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் தலைமைச்செயலகம் முழுவதும் சூழ்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். எத்தனையோ பதவியேற்புகள் நடைபெற்ற இந்த தலைமை செயலகத்தில் இன்று தினகரனின் பதவியேற்பும் எளிமையான முறையிலும், அதே சமயம் தள்ளுமுள்ளுகளுக்கு இடையேவும் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திடப்போகும் ஆரம்பமாக தினகரனின் பதவியேற்பு நிகழ்வு கருதப்படுகிறது. தீவிர ஆன்மீக பற்றாளரான தினகரன், இன்று வைகுண்ட ஏகாதேசி என்பதாலே இன்றைய தினத்தில் பதவியேற்க முடிவு செய்தார்.
ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ சபாநாயகர் தனபாலனின் அறைக்கு வந்த தினகரன், தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். சில நொடிகளிலே சபாநாயகரின் அறை நிரம்பிய நிலையில், அமர்ந்திருந்த அதிகாரிகளின் நாற்காலிகள் அனைத்தும் கூட்ட நெரிசல் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளப்பட்டு அவர்கள் எழுந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
பலமுறை அதிகாரிகள் கூறியும் நகர்ந்து போகாத ஆதரவாளர்களை தினகரன் எதிரில் திட்டவும் முடியாமல், நாற்காலியில் அமரவும் முடியாமல் அதிகாரிகள் கூட்டமிகுந்த கோயிலின் தர்ம தரிசனத்தில் சிக்கியது போல மாட்டிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் பதவியேற்பு நிகழ்வு முடிந்த நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் "இது ஆரம்பம் தான் இனிதான் ஆட்டமே... வருங்கால தலைமைச்செயலகமே" என கோஷமிட்டபடி பின்னாடியே போனது தினகரன் காதில் விழுந்ததோ இல்லையோ, கண்டிப்பாக அந்த அதிகாரிகளின் காதில் விழுந்திருக்கும்.
முதல்முறையாக தலைமை செயலகத்திற்கு நுழையும் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் ஏதாவது மோதலுக்கு வித்திடுவார்கள் என்று எண்ணிய போலீசாரின் எதிர்ப்பார்ப்பை தவிடு பொடியாக்கியது தினகரனின் பிரச்சனையற்ற பதவியேற்பு நிகழ்ச்சி.