சென்னை: 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்தத் திரைப்பட விழாவை நடிகர் அரவிந்த்சாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடிகை சுஹாசினி பேசினார். "சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவற்கு போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். ஆண்டுதோறும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறோம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பட விழாக்களுக்கு அரசு கணிசமான நிதி உதவி வழங்கி வருகிறது.
குறிப்பாக கர்நாடக மாநில அரசு 10 கோடி நிதி உதவி வழங்குகிறது. அடுத்த ஆண்டு தமிழக அரசு அதில் பாதியாவது நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இந்திய அளவில் சிறப்பானதாக இந்த விழாவை நாங்கள் நடத்துவோம்" என்றார் சுஹாசினி. என்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் ஆறு கேட்டகிரிகளில் திரையிடப்பட இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் நடித்த இரு படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
தமிழில் இந்தாண்டு வெளிவந்த 22 படங்கள் திரையிடலுக்குத் தேர்வாகி இருக்கின்றன. நேற்று தொடங்கிய இந்த சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.