திருவனந்தபுரம் : 22-வது கேரள சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய இந்த திரைப்பட விழா வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'மின்னாமினுங்கு' என்கிற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி. கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்கு அவர் தானே முன்வந்து கேட்டும் கூட, அவரை மதித்து பாஸ் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.
மேலும் அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளரான மலையாள இயக்குனர் கமலுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. "தேசிய விருதுபெற்ற நடிகை என்பதற்காக அவருக்கு தனியாகவெல்லாம் அழைப்பு அனுப்பவில்லை." எனக் கூறப்பட்டுள்ளது. "சொல்லப்போனால் அவர் நடித்த 'மின்னாமினுங்கு' படம் கூட இந்த விழாவில் திரையிடப்படவில்லை. தேசிய விருது பெற்றவர்களை அழைத்து கௌரவிக்கும் மேடை அல்ல இந்த திரைப்பட விழா" என இதுபற்றி கமல் தரப்பில் ரொம்பவே அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் கேரள திரையுலகினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திறமையான நடிகர்களை கேரள திரைப்பட விழாக் குழுவினர் மதிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.